எழுத்து என்பது வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பு அல்ல — அது சமூக மாற்றத்தின் வாள்
சிலர் கேட்கின்றனர்: "நீங்கள் ஏன் இவ்வளவு அதிகமாகக் கட்டுரைகள் எழுதுகிறீர்கள்? யார் இவற்றைப் படிக்கப் போகிறார்கள்?" இந்தக் கேள்வி பல நூற்றாண்டுகளாக எழுதாளர்களுக்கு எதிராக எழுப்பப்பட்டு வரும் ஒரு பழைய, ஆனால் ஆழமற்ற கேள்வி. இதற்கு நான் ஒரு பதில் மட்டும் சொல்கிறேன்: எழுத்து என்பது வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பு அல்ல. அது சமூக மாற்றத்தின் வாள்.
வரலாறு நமக்கு இதைத்தான் திரும்பத் திரும்பக் கற்றுத் தருகிறது. ஒரு பேனாவின் முனை, பல சமயங்களில் துப்பாக்கியைவிட அதிக சக்தி வாய்ந்தது.
இந்தியாவில் பாரதியின் "வந்தே மாதரம்", பெரியாரின் "குடியரசு", அண்ணாவின் "திராவிட நாடு" கலைஞரின் முரசொலி — இந்த எழுத்துக்கள் லட்சக்கணக்கான மக்களின் மனதில் புரட்சியைத் தூண்டின. பெரியாரின் பேனா சாதி அடிமைத்தனத்தை உடைத்தது. அண்ணாவின் எழுத்து, திராவிட இயக்கத்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியது. கலைஞரின் பேனா ஒரு சமூகத்துக்கான போர்வாளாய் உயர்ந்து நின்றது.
இலங்கையில் எண்ணற்ற எழுதுலகச் சிற்பிகளைக் குறிப்பிட முடியும். ஓர் புரிதலுக்காக சிவராமின் பகுப்பாய்வுகள், தளபதியின் கட்டுரைகள், காசியானின் எழுத்துக்கள் — இவை ஈழத் தமிழ் இளைஞர்களை போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றன. போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் பத்திரிகைகள் (விடுதலைப் புலிகள், குரல்) வெறும் செய்தித் தாள்கள் அல்ல — அவை ஒரு தேசத்தின் உயிர் நாடியாக செயல்பட்டன.
பிரான்ஸ் புரட்சியில் வால்டேர், ரூசோ போன்றோரின் எழுத்துக்கள் அரச மாளிகையைத் தூக்கி எறிந்தன. அமெரிக்க சுதந்திரப் போரில் தாமஸ் பெய்னின் "காமன் சென்ஸ்" பிரிட்டிஷ் ஆட்சியை உலுக்கியது.
உலக அளவில் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. லத்தீன் அமெரிக்காவில் சே குவேராவின் எழுத்துக்களும், நெல்சன் மண்டேலாவின் சிறைக்கடிதங்களும் அடக்குமுறை அமைப்புகளை உடைத்தன.
இந்த எழுத்துக்கள் அனைத்தும் "யார் படிப்பார்கள்?" என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சாட்சிகள். இரண்டு வரி கைகோ கவிதைகளால் சமூகம் மாறியதில்லை. ஆனால் துணிவான, ஆதாரபூர்வமான, உண்மையை எதிர்கொள்ளும் எழுத்துக்களால் தான் சமூகங்கள் மாறியுள்ளன.
எனவே, "யார் படிப்பார்கள்?" என்ற கேள்வி மிகவும் சிறியது. ஒரு எழுத்தாளனின் பேனா, பல சமயங்களில் துப்பாக்கியைவிட அதிக வலிமை கொண்டது. அது அநீதியை அம்பலப்படுத்துகிறது. அது மக்களின் வலியை ஆவணப்படுத்துகிறது. அது அடக்குமுறைக்கு எதிரான குரலை உயர்த்துகிறது.
இன்று ஈழத் தமிழ் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடிகளை வெளிப்படையாகப் பேசாமல், "நேர்மறை" என்ற பெயரில் மௌனம் சாதிப்பது எழுத்தாளனின் துரோகமாகும். ஒரு சமூகத்தை உண்மையாக நேசிப்பவன் அதன் குறைகளையும், தவறுகளையும், உள்ளார்ந்த பிரச்சினைகளையும் துணிவுடன் எழுத வேண்டும்.
எழுத்தாளன் ஒரு வரலாற்றுப் பதிவாளன் மட்டுமல்ல — அவன் ஒரு சமூகப் பொறுப்பாளன். அவனது பேனா முனைக்கு இருக்கும் வலிமை, பல சமயங்களில் துப்பாக்கியைவிட அதிகம்.
எனவே, நான் தொடர்ந்து எழுதுவேன்.
உண்மையை எதிர்கொள்ளும் எழுத்துக்களை எழுதுவேன்.
சமூகத்தின் வலியை, அநீதியை, போராட்டத்தை ஆவணப்படுத்துவேன்.
ஏனெனில், எழுத்து என்பது எனக்கு ஒரு தொழில் அல்ல — அது எனது தேசத்துக்கு நான் செய்யும் கடமை.
0 Comments